ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! எடை குறைஞ்சா ஊழியர்களுக்கு ஆப்பு… உணவுத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 19, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் (ரேஷன் கடைகள்) பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சரியான எடையில் கிடைப்பதை உறுதி செய்ய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, கடைகளில் பயன்படுத்தப்படும் மின்னணு தராசுகளில் (Electronic Weighing Scales) எடையைக் காட்டும் இருபுற டிஸ்ப்ளே வசதியும் (Dual Display) எவ்வித பழுதும் இன்றி, தெளிவாகச் செயல்படுகிறதா என்பதைப் பணியாளர்கள் நாள்தோறும் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடையை வெளிப்படையாகவும் துல்லியமாகவும் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்குக் குறைவான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தாலோ அல்லது ஆய்வின் போது எடை குறைவு கண்டறியப்பட்டாலோ, அதற்குப் பொறுப்பான பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் துறை ரீதியான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் தங்களின் கடமைகளை உணர்ந்து, முழுப் பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும், எடையளவு குறைபாடுகள் குறித்துப் பொதுமக்கள் தரப்பில் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மிகக் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.