“பெண்களுக்கு மாதம் ரூ.2500″… ரேசன் கார்டில் கை வைத்த விஜய்… தமிழக அரசின் ரகசிய பிளான் கசிந்தது…!

By Nanthini on வைகாசி 19, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) தொடர்பான சேவைகள், மே 15 முதல் மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் புதிய குடும்ப அட்டைக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்த மக்களுக்குப் பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு வழங்கல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடைகள், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னை உட்பட 38 மாவட்டங்களில் உள்ள சுமார் 34,792 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும், இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் அரசின் நலத்திட்டப் பயன்களை நேரடியாகப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

கடந்த 2023 முதல் 2024 ஜூலை வரை மட்டுமே தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனித்தனி குடும்பங்களாகப் பிரிவது, திருமணமான மகள்கள் தனியாக வசிப்பது மற்றும் அரசின் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தனி அட்டை தேவைப்படுவதுமே இந்த விண்ணப்பங்களின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் இதர திருத்தங்களை மேற்கொள்வதற்கான சேவைகளும் தங்கு தடையின்றித் தொடங்கியுள்ளன.

   

இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்தபடி, மகளிருக்கான மாத உதவித்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையான 1000 ரூபாய் தற்போது பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு, புதிய அட்டைகள் வழங்கப்பட்ட பின்னர், தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாதம் 2500 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை முதலமைச்சர் வெளியிடுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.