மத்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மக்கள் தங்களின் மொபைல் மூலமாகவே ஆதார் சேவைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தி வந்த பழைய செயலியைப் படிப்படியாக நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘Aadhaar’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் பொருட்டு, இந்த புதிய செயலி தமிழ் உட்பட 13 இந்திய மொழிகளில் வேகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலியில் முழு ஆதார் எண்ணையும் வெளிப்படுத்தாமல் அடையாளத்தை உறுதி செய்ய உதவும் ‘QR Code’ வசதி மற்றும் தேவையான விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரும் ‘Selective Share’ வசதி ஆகியவை உள்ளன. மேலும், 18 வயது நிரம்பியதை நிரூபிக்க ஆதார் எண் தேவையின்றி ‘வயது உறுதிப்படுத்தல் டோக்கன்’ மூலம் சரிபார்க்கும் வசதியும், அனுமதியற்றவர்கள் தகவல்களை அணுகாமல் தடுக்க பயோமெட்ரிக் தரவுகளைப் பூட்டும் (Lock/Unlock) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், ஒரே கணக்கில் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரின் ஆதார் விவரங்களைச் சேர்க்கும் வசதியும், முகவரி மற்றும் மொபைல் எண்ணை நேரடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளன.
பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் UIDAI-ன் அதிகாரப்பூர்வ “Aadhaar” ஆப்பைத் தரவிறக்கம் செய்து, மொபைல் எண் மற்றும் OTP/பயோமெட்ரிக் மூலம் லாகின் செய்ய வேண்டும். பழைய ஆப்பில் இருந்த விவரங்கள் இதில் தானாக மாறாது என்பதால், “Add Aadhaar” என்பதைத் தேர்வு செய்து, ஆதார் எண் மற்றும் OTP மூலம் குடும்பத்தினரின் விவரங்களை மீண்டும் பதிவு செய்வது அவசியமாகும். புதிய செயலியில் அனைத்தும் சரியாக அமைக்கப்பட்டதை உறுதி செய்த பிறகு, பழைய mAadhaar செயலியை மொபைலில் இருந்து நீக்கிவிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
