மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பை, உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்துரியில் இந்தத் தொற்றின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எபோலா பரவலானது என்ற ஆபத்தான வைரஸ் வகையைச் சார்ந்தது என்று ஆய்வகப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் காங்கோ நாட்டின் சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், தற்போது பரவி வரும் இந்த குறிப்பிட்ட எபோலா வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேகமான மருந்துகளோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று கவலை தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எபோலா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி மற்றும் சிலருக்கு உடலில் உள்ள உறுப்புகளில் கடுமையான ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. 1976-ஆம் ஆண்டு காங்கோவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு, முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் 25 முதல் 90 சதவீதம் வரை மரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது பரவி வரும் வேகத்தை கட்டுப்படுத்தவும், நோய் கண்டறிதல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு காங்கோ நாட்டுடன் இணைந்து அவசரகால உதவிகளை முடுக்கிவிட்டுள்ளது.
