“தைரியம் இருந்தா வா பாத்துடலாம்”… ஆதவ் அர்ஜுனாவை ஒருமையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்… திருச்செந்தூரில் பரபரப்பு….!

By Nanthini on வைகாசி 17, 2026

Spread the love

முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த அரசியல் மோதல் வெடித்துள்ளது. சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, தற்போது அமைச்சராகச் செயல்பட்டு வரும் நிலையில், அவரை அனிதா ராதாகிருஷ்ணன் ஒருமையில் விமர்சித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருச்செந்தூர் தொகுதியில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியமும் திராணியும் இருந்தால் தனது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யட்டும்; நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு எங்கள் ஊரான திருச்செந்தூர் தொகுதியில் வந்து என்னோடு நேருக்கு நேர் மோதிப் பார்க்கட்டும்” என்று சவால் விடுத்துள்ளார். மேலும், தற்போதைய தவெக ஆட்சி இன்னும் 4 முதல் 6 மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

   

திருச்செந்தூர் தொகுதி என்பது கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2026 சட்டசபை தேர்தல் வரை தொடர்ந்து 7 முறை அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ள அவரது அசைக்க முடியாத கோட்டையாகும். இதனால், தவெகவை வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்திற்குள் நுழைய முடியாதபடி அடித்து விரட்ட வேண்டும் என்று அவர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தவெக அரசு பெண்களுக்குத் தருவதாகக் கூறிய ரூ. 2,500 உரிமைத்தொகையை இன்னும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ. 2,000 உரிமைத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றார்.

   

இத்துடன் நிறுத்தாமல், அடுத்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தங்கள் தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றியமைத்த போதிலும், அங்கிருந்த மக்கள் அவரைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டதாகக் சாடிய அனிதா ராதாகிருஷ்ணன், அடுத்த சில மாதங்களில் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தவெக அரசுக்கு எதிராகத் தனது கடுமையான அரசியல் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.