ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் தவறவிட்டார். ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தில் ஃபின் ஆலன் 33 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த தவறு நடந்தது. சிராஜ் தெலுங்கானா காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக (DSP) கௌரவப் பதவி வகிப்பதால், சமூக வலைதளங்களில் இந்த கேட்ச் டிராப் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்த அரிய நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஃபின் ஆலன் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 அசுரத்தனமான சிக்ஸர்களுடன் 93 ரன்கள் குவித்து குஜராத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிராஜ் செய்த தவறால் சதத்தை நோக்கி மிரட்டலாக முன்னேறிய ஃபின் ஆலன், துரதிர்ஷ்டவசமாக 7 ரன்களில் சதத்தை தவறவிட்டாலும், கொல்கத்தா அணி ஒரு இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
சிராஜ் கேட்சை நழுவவிட்டதைத் தொடர்ந்து இணையவாசிகள் மீம்ஸ்கள் மற்றும் கமெண்ட்கள் மூலம் அவரை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர். சிராஜின் டிஎஸ்பி பதவியைக் குறிப்பிட்டு, “டிஎஸ்பி சார் வாரண்ட் இல்லாமல் யாரையும் பிடிக்க (Catch) மாட்டார் போல” என்றும், “வாரண்ட் இல்லாததால் ஃபின் ஆலனை சிராஜ் அரெஸ்ட் செய்யாமல் தப்பவிட்டுவிட்டார்” என்றும் ரசிகர்கள் ட்விட்டர் (X) தளத்தில் கிண்டலாகவும் சுவாரசியமாகவும் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
