பார்ப்பதற்குச் சுத்தமாகத் தெரிந்தாலும் சமையலறையில் நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் (Sponge) தான் வீட்டிலேயே மிக அழுக்கான, கிருமிகள் நிறைந்த பொருளாக விளங்குகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் உள்ள ஈரப்பதம், உணவுத் துகள்கள் மற்றும் வெப்பநிலை ஆகியவை நுண்ணுயிரிகள் பெருக சாதகமாக அமைகின்றன. அறிவியல் ஆய்வுகளின்படி, இவை பாக்டீரியாக்கள் தங்கிப் பெருகும் ஹாட்ஸ்பாட்டாகத் திகழ்வதோடு, இதில் ‘E. coli’, ‘Salmonella’ போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் 16 நாட்கள் வரை உயிர்வாழக்கூடியவை என உறுதியாகியுள்ளது.
அழுக்கான மற்றும் பழைய ஸ்பாஞ்ச்களைப் பயன்படுத்துவதால், கிருமிகள் தட்டுகள், கரண்டிகள் மற்றும் சமையலறை மேசைகளுக்கு எளிதாகப் பரவுகின்றன. உதாரணமாக, இறைச்சி கழுவிய பாத்திரத்தில் இருக்கும் கிருமிகள், ஸ்பாஞ்ச் மூலம் குடிக்கும் டம்பளருக்கோ அல்லது காய்கறி வெட்டும் பலகைக்கோ பரவக்கூடும். இத்தகைய குறுக்கு மாசுபடுதல் (Cross-contamination) காரணமாக, உணவு மூலம் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு மற்றும் சரும நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.
எனவே, பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்களை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஒருவேளை ஸ்பாஞ்சைக் கழுவிய பிறகும் அதிலிருந்து புளித்த வாடை வருவது, தொடும்போது பிசுபிசுப்பாக இருப்பது, கிழிந்து போவது அல்லது அதில் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய ஓரிரு நாட்களேயானாலும் உடனடியாக மாற்றிவிடுவது நல்லது.
ஸ்பாஞ்சை நீண்ட நாள் (குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்) சுத்தமாகப் பராமரிக்க, பாத்திரங்களைக் கழுவிய பின் அதில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களை நீக்கி, தண்ணீரை முழுமையாகப் பிழிந்துவிட்டு, காற்றோட்டமான உலர்ந்த ஸ்டாண்டில் வைக்க வேண்டும். தண்ணீரில் கொதிக்க வைப்பதோ அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதோ தற்காலிகத் தீர்வை மட்டுமே தரும் என்பதால், கிருமிகளின் தாக்கத்திலிருந்து குடும்பத்தைப் பாதுகாக்கப் புதிய ஸ்பாஞ்சை மாற்றுவது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்.
