2026-27ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான (Assessment Year) வருமான வரிக் கணக்கைத் (ITR) தாக்கல் செய்யக் காத்திருக்கும் லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருமான வரித் துறையானது ITR-1 மற்றும் ITR-4 ஆகிய படிவங்களை தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த வசதி இன்று, மே 15 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதால், வரி செலுத்துவோர் எவ்வித தாமதமும் இன்றி தங்களது வரிக் கணக்கை உடனே தாக்கல் செய்ய முடியும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோரின் வசதிக்காக இ-ஃபைலிங் போர்ட்டலில் (e-filing portal) நேரடியாகத் தகவல்களைப் பதிவிடும் ஆன்லைன் முறை மற்றும் ஆஃப்லைனில் தரவுகளைத் தயார் செய்து பதிவேற்றம் செய்யும் எக்செல் பயன்பாடு (Excel Utility) ஆகிய இரண்டு விருப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில் ITR-1 படிவமானது, ஆண்டு வருமானம் ₹50 லட்சம் வரை பெற்று, தங்களது வருமான ஆதாரமாகச் சம்பளம், ஒரு வீடு அல்லது வட்டி போன்ற பிற வழிகளைக் கொண்டிருப்பவர்களுக்கானது ஆகும்.
மறுபுறம், ITR-4 படிவமானது மொத்த வருமானம் ₹50 லட்சம் வரை கொண்ட தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF) மற்றும் நிறுவனங்கள், வணிகம் அல்லது தொழில் மூலம் தங்களது வருமானத்தைக் காட்டுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது வரிப் பணிகளை உரிய நேரத்தில் துல்லியமாக முடிக்க விரும்பும் ஊழியர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் அரசின் இந்த முன்கூட்டிய நடவடிக்கை பெரும் வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரித் தாக்கலை முன்கூட்டியே தொடங்குவது, காலக்கெடு நெருங்கும்போது இணையதளத்தில் ஏற்படும் கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் நெரிசலைத் தவிர்க்க உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதோடு, தங்களது வரிக் கணக்கை விரைவாகத் தாக்கல் செய்வதன் மூலம், அரசு வழங்கும் ரீஃபண்ட் (Refund) தொகையை எவ்விதத் தடையுமின்றி சீக்கிரமாகப் பெற முடியும் என்பதும், ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைச் சரிசெய்யப் போதிய நேரம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
