நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சியை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் கண்டு மகிழ்ந்தனர். சூர்யாவின் மிரட்டலான நடிப்பும், படத்தின் கதைக்களமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்துவிட்டுத் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சிறப்புக் காட்சி முடிந்து நடிகை த்ரிஷா திரையரங்கை விட்டு வெளியேறியபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர், “தளபதியைக் (விஜய்) கேட்டதா சொல்லுங்க…” என்று குரல் கொடுத்தார். இதைக் கேட்டுப் புன்னகைத்த த்ரிஷா, சற்றும் தயங்காமல் ‘கண்டிப்பா’ என்று பதிலளித்துவிட்டுச் சென்றார். த்ரிஷாவின் இந்தப் பதிலைக் கேட்டு உற்சாகமடைந்த ரசிகர்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரம் ஆனது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
