விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு தர்மசங்கடமான சூழலை எதிர்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அமைச்சரவையில் விசிக இணைய வேண்டும் என்ற அழுத்தம் அக்கட்சிக்கு வெளியிலிருந்து மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளிருந்தே எழத் தொடங்கியுள்ளது. இதுவரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமா, இடதுசாரிகளின் அரசியல் நிலைப்பாட்டை ஒட்டியே தனது முடிவுகள் இருக்கும் என்றும், தவெக அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு என்றும் கூறி வந்தார். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் விசிகவின் 40 ஆண்டுகால அரசியல் பாதையை மாற்றியமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   

விசிக தரப்பில் மூத்த நிர்வாகியான வன்னியரசு உள்ளிட்டோர், தற்போதைய அரசியல் சூழலைப் பயன்படுத்தி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. விசிகவின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு அமைச்சர் பதவியைப் பெறுவது கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என ஒரு தரப்பினர் நம்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பு திருமாவளவனுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கட்சியின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் இந்த அதிகார வாய்ப்பைத் நழுவவிடக்கூடாது என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது.

   

இருப்பினும், இந்த முடிவில் உள்ள சவால்களை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திருமாவளவனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். திமுக கூட்டணியிலிருந்து விலகி விஜய் அமைச்சரவையில் இணைந்தால், அது திருமாவளவனின் அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும், திமுகவின் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். “இடதுசாரிகளின் நிலைப்பாட்டையே பின்பற்றுவோம்” என்று கூறிவிட்டு, திடீரென தவெக பக்கம் சாய்வது பொதுவெளியில் விமர்சனங்களை உருவாக்கும் என்பது இவர்களின் கவலையாக உள்ளது. இத்தகைய ரிஸ்க்குகளை எடுப்பதென்றால், அதற்கு ஈடாகச் சில அரசியல் ஆதாயங்களை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

கட்சி நிர்வாகிகள் முன்வைக்கும் மற்றொரு முக்கிய யோசனை என்னவென்றால், ஒருவேளை அமைச்சரவையில் சேருவதென முடிவெடுத்தால், திருமாவளவனே நேரடியாக அமைச்சராக வேண்டும் என்பதாகும். “நீங்கள் அமைச்சரானால் அதை யாராலும் எதிர்க்க முடியாது, உங்களை எதிர்ப்பது தவறான பிம்பத்தை உருவாக்கும்” என்று அவர்கள் திருமாவிடம் கூறி வருகின்றனர். மேலும், திருச்சி கிழக்குத் தொகுதியை விசிகவுக்குப் பெறுவது குறித்தும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். திமுகவுடனான உறவு எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழலில், தவெக பக்கம் செல்வதில் தவறில்லை என்கிற விவாதங்கள் தற்போது விசிகவிற்குள் அலை அடித்துக் கொண்டிருக்கின்றன.