தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ. 2,500 வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது ரூ. 1,000 பெற்று வரும் பயனாளிகளுக்கு இந்தத் தொகை ரூ. 2,500-ஆக உயர்த்தப்படுவதுடன், கூடுதல் பயனாளிகளைச் சேர்க்கும் வகையில் திட்டத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 60 வயது வரையிலான, குடும்பத் தலைவிகளாக உள்ள அனைத்துப் பெண்களும் பயன்பெறத் தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயனாளர்களாக உள்ளவர்கள் தானாகவே இத்திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்குக் குறைவாக இருத்தல் மற்றும் ஒரு குடும்பத்திற்கு ஒரு பயனாளி என்ற நிபந்தனைகள் தொடர வாய்ப்புள்ளது.
விண்ணப்பிக்கும் முறையைப் பொறுத்தவரை, அரசு இதற்கான பிரத்யேக வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட உள்ளது. பொதுவாக, ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் வாயிலாகப் பெறப்படும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டண ரசீது மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடிப்படை ஆவணங்களாகத் தேவைப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலி குறித்த அறிவிப்புகள் வெளியானதும், தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும்.
