உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த வீட்டிலேயே ஒன்றரை கோடி ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸீம் என்பவரின் மகளான அரீபா, அர்ஷத் வார்சி என்ற இளைஞரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு தந்தை அஸீம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மகளைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரீபா, தந்தையை நிலைகுலைய வைக்க ஒரு விபரீதத் திட்டத்தைத் தீட்டினார்.
திட்டத்தின்படி, நள்ளிரவில் தனது காதலன் அர்ஷத் வார்சியை வீட்டிற்கு வரவழைத்த அரீபா, வீட்டிலிருந்த சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் கொள்ளை நடந்துவிட்டதாக நாடகமாடி தந்தையை நம்ப வைத்துள்ளார். தனது சொந்த மகளே இத்தகைய காரியத்தில் ஈடுபடுவார் என்று கனவிலும் நினைக்காத தந்தை, போலீசில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் அரீபாவின் செல்போன் உரையாடல்கள் மற்றும் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
காதலனுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழவும், தன்னை எதிர்த்த தந்தையைப் பொருளாதார ரீதியாக முடக்கவும் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரீபா அரங்கேற்றியது விசாரணையில் உறுதியானது. இறுதியில், காவல்துறையினர் அரீபா மற்றும் அவரது காதலன் அர்ஷத் வார்சியைக் கைது செய்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும் தொகையை மீட்டனர். காதலுக்காகப் பெற்ற தந்தையையே நடுத்தெருவில் நிறுத்தத் துணிந்த மகளின் இந்தச் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
