நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான இரு அணிகளாக கட்சி பிளவுபட்டுள்ள சூழலில், தமிழக முதல்வர் விஜய்யின் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தியடைந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் உத்தரவை மீறியதாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்ட 26 பேரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “நான் இயக்கத்திற்கு என்ன துரோகம் செய்தேன்? எதற்காக எனது பதவி பறிக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய அவர், எவ்வித விளக்கமும் கேட்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். தான் எப்போதும் கட்சிக்கும், சின்னத்திற்கும் விசுவாசமாக இருப்பவன் என்றும், தனது உழைப்பிற்கு கிடைத்த பரிசாகவே இந்த பதவி நீக்கத்தைப் பார்ப்பதாகவும் அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின், தான் கடந்த ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும், துணை மேயராகவும் ஜெயலலிதாவின் பாராட்டைப் பெறும் வகையில் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு உறுதுணையாக இருந்த தனக்கு, தற்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தமக்கு ஆறுதல் கூறிய நிலையில், தற்போது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த சமயத்தில் முன்னறிவிப்பின்றி பதவியைப் பறித்தது பெரும் மனவேதனையை அளிப்பதாகக் கூறி அவர் கண்ணீர் சிந்தினார்.
