பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திக்ராஜா என்பவரும், செல்வியும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10 ஆண்டுகளாக காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில் சமூக வலைதள மோகம் நஞ்சாகக் கலக்கத் தொடங்கியுள்ளது.
கார்த்திக்ராஜாவுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததோடு, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. தற்செயலாக கணவரின் செல்போனை பார்த்த செல்வி, அவர் ஒரு திருமணமான பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தனது மாமனார், மாமியாரிடம் முறையிட்டபோது, அவர்கள் மகனைக் கண்டிப்பதற்குப் பதிலாக, “ஆண்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள், நீ ஏன் செல்போனை லாக் செய்து வைக்கவில்லை?” என்று மகனிடம் செல்வி காதுபடவே கேட்டுள்ளனர். இந்த அலட்சியமான பதில் செல்வியின் மனதை வெகுவாகப் பாதித்துள்ளது.

தனது 10 ஆண்டு கால காதலையும், கணவர் மீதான உரிமையையும் முன்வைத்து செல்வி நியாயம் கேட்டபோது, அந்த அந்நியப் பெண்ணுக்காக கார்த்திக்ராஜா தனது மனைவியைக் கன்னத்தில் அறைந்துள்ளார். “நீ வேண்டாம், அவள்தான் வேண்டும்” என்று கணவர் கூறிய வார்த்தைகள் செல்வியைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளியுள்ளது. மனமுடைந்த அவர், தனது இரண்டு வயது குழந்தையை ஹாலில் விட்டுவிட்டு, அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர்கள் செல்வியின் சடலத்தைக் கண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்தோரை உலுக்கியது.
இச்சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்ராஜாவை கைது செய்துள்ளனர். செல்வி எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதளத் தொடர்புகளால் ஒரு இளம் பெண்ணின் உயிர் பறிபோனதும், இரண்டு வயதுக் குழந்தை தாயை இழந்து தவிக்கும் நிலையும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
