தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து அடுத்தகட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீட்டில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வல்லமை படைத்த தொழில், சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய நான்கு முக்கிய துறைகளைத் திறம்பட நிர்வகிப்பதே முதலமைச்சர் விஜய்க்கு முன் இருக்கும் தற்போதைய சவாலாகும். இந்தத் துறைகளில் மேற்கொள்ளப்படும் சரியான தேர்வுகள் மட்டுமே தமிழக மக்களின் நம்பிக்கையையும், உலகளாவிய முதலீட்டாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பாக, தமிழகத்தின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நனவாக்க, தொழில் துறைக்கு ஒரு வலுவான அமைச்சர் தேவைப்படுகிறார். ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என அழைக்கப்படும் தமிழகத்தை ஆசியாவின் முன்னணி முதலீட்டு மையமாக மாற்ற, உலகளாவிய தொடர்புகளும் தொழில் நட்பு மனப்பான்மையும் கொண்ட ஒருவரை நியமிப்பது அவசியம். அதேபோல், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் கல்வித் துறை, அடித்தட்டு மக்களுக்கான சுகாதாரத் துறை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றுக்குத் தொலைநோக்கு பார்வை கொண்ட அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பதே தவெக அரசின் வெற்றியைத் தீர்மானிக்கும்.
தற்போது கசிந்துள்ள உத்தேச அமைச்சரவைப் பட்டியலின்படி, காவல் மற்றும் பொது நிர்வாகத்தை முதலமைச்சர் விஜய் தன் வசம் வைத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக்கல்வித் துறை வெங்கட்ராமனுக்கும், மின்சாரத் துறை சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கும், நகராட்சி நிர்வாகம் என்.ஆனந்திற்கும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் சூடுபிடித்துள்ளன. சி.வி. சண்முகம் தரப்பு 8 இடங்களைக் கோரினாலும், 5 அமைச்சரவை பதவிகளை வழங்க விஜய் தரப்பு உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடி மற்றும் மின் கட்டண உயர்வு போன்ற சவால்களுக்கு மத்தியில், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரசியல் கூட்டணி மாற்றங்கள் மற்றும் துறை ஒதுக்கீட்டுப் பணிகளுக்கு இடையே, தகுதியான நபர்களைத் திறமையான துறைகளில் அமர்த்துவதன் மூலமே தமிழகத்தின் நீண்டகால வளர்ச்சி உறுதி செய்யப்படும். இந்த நான்கு ‘தூண்’ துறைகளில் விஜய் அடிக்கும் சிக்சர், தமிழகத்தின் பொருளாதாரப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
