“யார் அவர் நீக்க?”.. இபிஎஸ் எடுத்த முடிவுகள் செல்லாது… கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி… மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி… அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு…!!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வேலுமணி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ-க்கள் கொறடா உத்தரவை மதிக்கவில்லை என்றும், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சட்டமன்ற விதிகளின்படி பெரும்பான்மை உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அதுவே உண்மையான பலம் என்று குறிப்பிட்ட அவர், இபிஎஸ் எடுத்து வரும் எந்த நடவடிக்கையும் செல்லாது எனத் தெரிவித்தார்.

கட்சியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வேலுமணி, கடந்த 11-ம் தேதி யார் யார் எந்தெந்தப் பொறுப்புகளில் இருந்தார்களோ, அதே பொறுப்புகளில் அவர்கள் நீடிப்பார்கள் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக யாரையும் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் ஒருவரை நீக்க சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தொடர்ந்து அதே பதவிகளில் செயல்படுவார்கள் எனத் தெளிவுபடுத்தினார்.

   

மேலும், சட்டமன்றக் குழு அமைப்பு என்பது தனி, கட்சி அமைப்பு என்பது தனி என்பதை விளக்கிய அவர், தற்போதைய தலைமை எடுத்து வரும் நடவடிக்கைகள் கட்சி விதிகளுக்குப் புறம்பானது என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமியின் முடிவுகள் செல்லாது என்பதைத் தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய வேலுமணி அணியினர், அதிமுகவின் எதிர்காலத்தைக் காப்பாற்ற அடுத்தகட்ட சட்டப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். இந்த அதிரடிப் பேட்டி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.