“என் பேரக்குழந்தைகளுக்காக”… சவுமியா அன்புமணி உருகியபோது முதல்வர் விஜய் செய்த ‘அந்த’ காரியம்… தமிழக அரசியலில் இப்படியொரு மாற்றமா?…!

By Nanthini on வைகாசி 13, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். குறிப்பாக, பாமக சார்பில் பேசிய சவுமியா அன்புமணி, தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் பேசும் ஒவ்வொரு கருத்தையும் முதல்வர் விஜய் மிகுந்த கவனத்துடன் கேட்டு, தனது கைகளாலேயே பென்சிலில் குறிப்பெடுத்துக் கொண்டது அவையில் இருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது.

சவுமியா அன்புமணி பேசுகையில், சமூக நீதி, ஜனநாயகம் மற்றும் சமத்துவமே பாமகவின் அடிப்படை கொள்கைகள் என்று குறிப்பிட்டார். போதை இல்லாத தமிழ்நாடு மற்றும் வளர்ச்சியில் சிறந்த தமிழகத்தை உருவாக்குவதே தங்களின் நோக்கம் எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

   

மது ஒழிப்பு மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், “மதுவால் தமிழகமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது, எனது பேரக்குழந்தைகள் வளரும்போது ஒரு போதையில்லாத தமிழகம் உருவாகியிருக்க வேண்டும்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு டாஸ்மாக் கடையை மூடினால், அதன் பின்னணியில் உள்ள சந்துகளில் மறைமுகமாக நான்கு கடைகள் முளைப்பதாகப் புகார் கூறினார். இத்தகைய சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க அரசு கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

   

வேளாண் மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் பேசிய அவர், அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் முறையான கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்களுக்குத் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் பாமகவின் கொள்கைகளோடு ஒத்துப்போவதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டிருப்பதை மனதார வரவேற்பதாகத் தெரிவித்தார்.

 

விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், சவுமியா அன்புமணியின் கோரிக்கைகளையும் முதல்வர் விஜய் ஒரு மாணவனைப் போல ஆர்வத்துடன் குறிப்பெடுத்தது புதிய அரசியல் பண்பாடாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த அணுகுமுறை, மக்களின் குறைகளைச் செவிமடுத்துச் செயல்படும் ஒரு பொறுப்பான அரசை முன்னிறுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.