உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீர்குலைந்த சுகாதாரக் கட்டமைப்பைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. வெறும் இரண்டு குளுக்கோஸ் பாட்டில்களை ஏற்றிவிட்டு, நோயாளியை விதியின் வசம் விட்டுவிட்டதாகவும், மருந்து மற்றும் ஊசிகளை வெளியிலிருந்தே வாங்கச் சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாகவும் அந்தச் சிறுமி கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தனது தந்தை உயிருக்குப் போராடிய நிலையில், அங்கிருந்த செவிலியர்களிடம் உதவி கேட்டு அந்தச் சிறுமி கதறியுள்ளார். ஆனால், எவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை என்றும், ஒருவர் வந்து பார்த்துவிட்டு அலட்சியமாகச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதியில் முறையான மருத்துவக் கவனிப்பு இல்லாததால் சதீஷ் குப்தா உயிரிழந்தார். தனது தந்தையின் உடலுக்கு அருகில் அமர்ந்து அந்தச் சிறுமி கதறி அழுவது, அங்குள்ள சுகாதாரத் துறையின் அவல நிலையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உ.பி-யின் சுகாதாரத் துறை தற்போது “வென்டிலேட்டர்” நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கான அரசு மருத்துவமனைகளில் நிலவும் இத்தகைய அலட்சியப்போக்கு மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, ஒரு உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மகளின் வாழ்நாள் துயரமாகவும் மாறியுள்ளது. இத்தகைய முறைகேடுகள் மற்றும் கவனக்குறைவு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
