தமிழக சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவராகத் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், ஆளும் தரப்பிற்கு வாழ்த்துக்களைக் கூறிய அதே வேளையில், அரசியல் ரீதியான விமர்சனங்களையும் அதிரடியாக முன்வைத்தார். நடந்து முடிந்த தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்காத ஆளும் கட்சியையும், முதல்வர் விஜய்யையும் சுட்டிக்காட்டிய அவர், “கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்” எனத் தனது உரையைத் தொடங்கினார். மேலும், “வண்டிக்கு பிரேக் போலவும், காளைக்கு மூக்கணாங்கயிறு போலவும் செயல்பட்டு நாங்கள் ஆட்சியைச் சரியான பாதையில் வழிநடத்துவோம்” என்று அவர் குறிப்பிட்டது சபையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தனது உரையின் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த “சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற முழக்கம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. 2023-ம் ஆண்டு அவர் சனாதனத்தை நோய்களுடன் ஒப்பிட்டுப் பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்ற விமர்சனங்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகளுக்குப் பிறகும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதை இன்றைய உரை உணர்த்துகிறது. பாடகர் கிரிஷ் போன்றவர்களின் “கர்மா” ரீதியான விமர்சனங்களுக்கும், “சனாதனத்தைத் தொட்டதால் தான் வீழ்ச்சி” என்ற சமூக வலைதளப் பிரச்சாரங்களுக்கும் அஞ்சாமல், கொள்கைப் பிடிப்போடு அவர் பேசியது திராவிட அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
உதயநிதியின் இந்தப் பேச்சுக்குக் பின்னால் ஒரு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அவரது பேச்சை “வெறுப்புப் பேச்சு” என்று கண்டித்திருந்ததுடன், அது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் இதை ஒரு பெரும் ஆயுதமாகப் பயன்படுத்திய போதிலும், தனது முதல் சட்டமன்ற உரையை அதே “சனாதன ஒழிப்பு” முழக்கத்துடன் அவர் முடித்துள்ளது, திமுக தனது அடிப்படைத் திராவிடக் கொள்கைகளில் இருந்து இம்மியும் பின்வாங்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
சமூக நீதி மற்றும் சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் உதயநிதி இதை முன்னெடுத்தாலும், இது மீண்டும் ஒரு மதரீதியான விவாதமாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் “வெல்க தமிழ்.. வாழ்க தமிழ்நாடு” என்று உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு, மறுபுறம் “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்” என அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது, வரும் காலங்களில் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பெரும் மல்லுக்கட்டல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
