பெங்களூருவில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த தொழிலதிபர் ஒருவர், தனது வங்கிக் கணக்கிலிருந்து 5 லட்ச ரூபாயை இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த மோசடி ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
மோசடி கும்பல் அனுப்பிய அந்தத் திருமண அழைப்பிதழுடன் ஒரு APK (Android Package Kit) கோப்பும் இணைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொழிலதிபர் அந்தப் பதிப்பைத் தற்செயலாகப் பதிவிறக்கம் செய்தபோது, அதில் இருந்த மால்வேர் (Malware) அவரது ஸ்மார்ட்போனில் இருந்த ரகசியத் தரவுகள் மற்றும் வங்கி விபரங்களைத் திருடியுள்ளது. இதன் மூலம் அவரது கணக்கிலிருந்து 5 லட்ச ரூபாயை மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது.
இந்தத் திட்டமிட்ட சைபர் குற்றச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாத எண்களிலிருந்து வரும் எந்தவொரு செயலி (App) அல்லது கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
