சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 19 வயது இளைஞர் கோகுல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் இருவர் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் கோகுலுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, சிகரெட் பிடித்த விவகாரத்தை வீட்டில் காட்டி கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சிறுவர்கள் கோகுலை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவர்கள் வீடியோ எடுத்தபடியே கூச்சலிட்டதாகக் கூறப்படுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையைச் செய்துவிட்டு தப்பியோட முயன்ற மூன்று சிறுவர்களையும் அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மது மற்றும் சிகரெட் பழக்கத்தால் சிறுவர்கள் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
