தமிழகத்தின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்ற தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பதவியேற்பு முடிந்த கையோடு அரசியல் நாகரீகம் கருதி தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்ற முதல் நாளில் பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியார் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர், பெரியார் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவரை வரவேற்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்று சட்டசபை நடவடிக்கைகள் முடிந்த பிறகு, முதலமைச்சர் விஜய் நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்த இந்தச் சந்திப்பு, அரசியல் மாச்சரியங்களைக் கடந்து மிகுந்த மரியாதையுடன் அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு விஜய் சென்றார். அங்கு திருச்சி எம்.பி. துரை வைகோ அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். விஜய்யைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்ட வைகோ, அவரைக் கட்டி அணைத்து அன்பு பாராட்டினார். தனது குடும்பத்தினர் மற்றும் பணிப்பெண்களை விஜய்க்கு அறிமுகப்படுத்திய வைகோ, அவர்களை விஜய்யுடன் புகைப்படம் எடுக்கச் செய்து நெகிழ்ந்தார். வைகோவின் இல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விஜய்க்கு திருஷ்டி கழிக்க, பதிலுக்கு விஜய்யும் அவருக்குத் திருஷ்டி கழித்த நிகழ்வு அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கும் விஜய் சென்றார். அன்புமணியின் இல்லத்தில் அவரது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில், சீமான் அவரை வாசலுக்கே வந்து ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், மாற்றுக் கட்சித் தலைவர்களை இவ்வாறு நேரில் சந்தித்து வருவது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான புதிய கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
