கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ஒன்றரை வயது சிறுவன் துரு விஷ்ணு உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவத்தில் தனது மகனைப் பறிகொடுத்த விமல், தற்போது விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “என் மகனை இழந்த வலி இன்னும் ஆறவில்லை என்றாலும், விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதை அடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தங்களின் எதிர்பார்ப்பு என விமல் தெரிவித்துள்ளார். அந்தச் சோகமான நாளில் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு உரியத் தீர்வும், இனி வரும் காலங்களில் இது போன்ற பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்வதும் புதிய அரசின் கடமை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
https://x.com/i/status/2053489686702915701
கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிய அந்த ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளன. இந்நிலையில், தவெக அரசுப் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காட்டும் அதே வேகத்தை, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், முறையான நீதி கிடைப்பதிலும் காட்ட வேண்டும் என விமல் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
