பிரயாக்ராஜின் முண்டேரா பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், தாய்ப்பாசத்தின் புனிதத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. சீமா என்ற பெண், தனது கள்ளக்காதலன் உபைதுடன் இருந்ததை அவரது 8 வயது மகன் அயன் நேரில் பார்த்துள்ளான். தங்களின் இந்தத் தவறான உறவு வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், சீமா தனது காதலனுடன் சேர்ந்து பெற்ற மகன் என்றும் பாராமல் அயனை அடித்துக் கொன்றுள்ளார். காமக் கண் மறைத்ததில், ஒரு தாயே தன் பிள்ளையின் உயிரைப் பறித்த இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனைக் கொன்ற பிறகு, அந்தத் தாய் எவ்வித சலனமும் இன்றி நாடகமாடியுள்ளார். சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கூறி காவல்துறையையும் அக்கம் பக்கத்தினரையும் நம்ப வைக்க முயன்றார். ஆனால், அயனின் தம்பிகள் காவல்துறையினரிடம் உண்மையை உடைத்தனர். தங்கள் கண் முன்னாலேயே அண்ணன் கொல்லப்பட்டதை அவர்கள் விவரித்தபோது, அந்தத் தாயின் முகத்திரை கிழிந்தது. உண்மையை மறைக்க ஒரு தாய் தன் மற்ற குழந்தைகளையும் அச்சுறுத்தியது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
கைது செய்யப்பட்ட பிறகு அந்தப் பெண் அளித்த வாக்குமூலம் இன்னும் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது. “என் கணவர் ஏற்கனவே என்னை விட்டுப் பிரிந்துவிட்டார், இப்போது என் மகனும் இறந்துவிட்டான்; இனியும் என் காதலனை இழக்க நான் விரும்பவில்லை, அதனால்தான் பொய் சொன்னேன்” என்று எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி அவர் கூறியுள்ளார். கலிமுற்றிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உறவுகளையும் தாயன்பையும் விட ஒரு பெண்ணின் ஆசை மேலோங்கி நின்றதைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், மனித நேயத்தை உலுக்கியுள்ளது. தற்போது அந்தப் பெண்ணும் அவரது காதலனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
