கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த அவர், மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் ஒளிந்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, திரூர் போலீசாரின் உதவியுடன் பாரிப்பள்ளி போலீசார் ஆஷிக்கை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஆஷிக், அவர்களைக் கடுமையாகத் தாக்கினார். ஒருகட்டத்தில் சஜீர் என்ற காவலரின் கையை ஆஷிக் ஆக்ரோஷமாகக் கடித்தார். இதில் காயமடைந்த காவலர் சஜீர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், போலீசார் ஆஷிக்கை விடாமல் போராடி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏற்கனவே உள்ள பாலியல் வழக்குடன், தற்போது போலீசாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதற்காகவும், காயம் ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது கூடுதலாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
