பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ‘முத்தைய்யா’ உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ வேகமாக பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், உணவகத்தின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்த பவன் என்ற ஊழியர் தீக்காயங்களுடன் உயிரிழந்தார். மேலும், புகையினால் மூச்சுத்திணறல் மற்றும் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான 4 ஊழியர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான உண்மையான காரணம் என்ன? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
