தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதன் வெளிப்பாடாகவே, அதிகாரப்பூர்வக் கூட்டங்களுக்குப் பிறகு சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தனியே ஆலோசனை நடத்தியது, கட்சியில் பிளவு ஏற்படுவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்த உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், இன்று சென்னையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களில் பிரதானமானது, ‘ஆட்சி அதிகாரப் பங்கீடு’ குறித்த கோரிக்கையாகும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு தரப்பு பாஜகவின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் என்றும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே தொண்டர்களைத் தக்கவைக்கவும், கட்சியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யவும் முடியும் என அவர்கள் வாதிடுகின்றனர். அதேசமயம், சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஆகியோரைத் தவிர்த்ததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என மற்றொரு தரப்பு இக்கூட்டத்தில் போர்க்கொடி தூக்கத் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பதைப் போன்ற ‘பதவி கால வரம்பு’ (Term Limits) முறையைக் கொண்டு வர அதிருப்தி குழுவினர் காய் நகர்த்தி வருகின்றனர். ஒரு நபர் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பொதுச் செயலாளர் பதவியில் நீடிக்கக் கூடாது என்ற விதியை அமல்படுத்துவதன் மூலம், ஓரிடத்தில் அதிகாரம் குவிவதைத் தடுக்கவும், புதிய தலைமுறைக்கு வாய்ப்பளிக்கவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இது இபிஎஸ்-ஸின் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவாலாகவே கருதப்படுகிறது.
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குப் பின்பலமாகச் செயல்பட அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. தவெக தற்போது திமுக கூட்டணிக் கட்சிகளை நம்பியிருந்தாலும், எதிர்காலத்தில் நிலையான ஆட்சிக்கு அதிமுகவின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும் என்பது இவர்களின் கணிப்பு. எனவே, இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விஜய்யுடன் கூட்டணி வைப்பது மற்றும் கட்சி பிளவுபடாமல் இருக்க எடுக்க வேண்டிய சமரச முடிவுகள் குறித்து அடுக்கடுக்கான விவாதங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
