“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” – தமிழகத்தையே அதிர வைக்கப்போகும் அந்த ஒற்றை வாசகம்… பதவியேற்பு விழா இப்படி தான் நடக்கும்.. ரூல்ஸ் இதுதான்…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்கிறார். சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதலே முழுவீச்சில் நடைபெற்று வந்தன. தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகர் விஜய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண லட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பதவியேற்பு விழாவின் முக்கிய நிகழ்வாக, ஆளுநர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தைத் தொடங்கி வைக்க, விஜய் தமிழில் “சி.ஜோசப் விஜய் ஆகிய நான்…” என்று உணர்ச்சிப்பொங்க உறுதிமொழி ஏற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். தலைமைச் செயலாளர் சாய்குமார் முறைப்படி விழாவைத் தொடங்கி வைக்க, ரகசியக் காப்பு உறுதிமொழியும் வாசிக்கப்பட உள்ளது. விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் மற்றும் அதிகாரப்பூர்வப் பதவியேற்புக்காக அவரது தொண்டர்கள் நீண்ட காலமாகத் தவமிருந்த நிலையில், அந்த கனவு இன்று நனவாகிறது.

   

விஜய்யின் வெற்றியைத் தமிழகம் முழுவதும் உள்ள த.வெ.க தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தின் கதவுகள் முதல் முறையாகத் தொண்டர்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. அங்கு குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், “இது தமிழ் மக்களின் வெற்றி” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

   

பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அனைவரும் நேரடியாகத் தலைமைச் செயலகம் (கோட்டை) செல்லத் திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள முதல்வர் அறையில், மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் விஜய் முறைப்படி தனது இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்க உள்ளார். தமிழக அரசியலில் ஒரு நடிகராக இருந்து மக்கள் செல்வாக்குடன் முதல்வராக உயர்ந்துள்ள விஜய்யின் இந்த நகர்வு, இந்திய அரசியலிலேயே உற்றுநோக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது.