தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, 34.92 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் ஆளுநர் அர்லேகர் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எனினும், பதவி ஏற்பதோடு பணி முடிந்துவிடாமல், வரும் 13-ஆம் தேதிக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் புதிய அரசுக்கு உள்ளது.
சட்டசபை விதிகளின்படி, ஆட்சி அமைப்பதற்கான அடுத்த முக்கிய கட்டம் சபாநாயகர் தேர்தலாகும். அரசு ஒரு வேட்பாளரை முன்மொழிய, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வாக்கெடுப்பு நடைபெறும். ஒருவேளை போட்டி இல்லையெனில், அறிவிக்கப்பட்ட சபாநாயகரை முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவரும் கரம் பிடித்து இருக்கைக்கு அழைத்துச் செல்வர். இதன் தொடர்ச்சியாகவே அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும். இந்தத் தீர்மானத்தின் மீது முதல்வர் விஜய் உரையாற்றி சபையின் ஆதரவைக் கோருவார், அதேபோல் எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்படும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு பொதுவாக ‘டிவிஷன்’ (Division) முறைப்படி நடைபெறும். இதற்காக அவையின் கதவுகள் மூடப்பட்டு, எம்.எல்.ஏ.க்கள் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். சட்டசபை செயலாளர் ஒவ்வொரு பிரிவிலும் தீர்மானத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போரைத் தனித்தனியாக எழுந்து நிற்கச் சொல்லி கணக்கெடுப்பார். இதில் முதல்வர் முதல் பிரிவிலும், எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நேர் எதிரே உள்ள ஆறாவது பிரிவிலும் அமர்ந்திருப்பர். செயலாளர் வழங்கும் இறுதி எண்ணிக்கையின் அடிப்படையில், தீர்மானம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியுற்றதா என்ற அறிவிப்பைச் சபாநாயகர் முறைப்படி வெளியிடுவார்.
தற்போது தவெக அரசுக்குத் தேவையான பெரும்பான்மை மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஊசலாடுவதால், இந்த வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தீர்மானத்தில் வெற்றி பெற்றால் அரசு தனது பணிகளைத் தடையின்றித் தொடரும். ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அந்தத் தகவல் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட்டு அரசு கலைக்கப்படும் சூழல் உருவாகும். எனவே, வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த அரசியல் பலப்பரீட்சையில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பது அக்கட்சிக்கு வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது.
