வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொல்லப்பட்டாலோ அல்லது அவர் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாலோ, எதிரி நாடுகள் மீது உடனடியாகவும், தானியங்கி (Automatic) முறையிலும் அணுஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்ற புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் நிலவி வரும் நீண்டகால மோதல் போக்கின் உச்சமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
சீனா மற்றும் ரஷ்யாவுடன் மட்டும் நெருங்கிய நட்புறவைப் பேணி வரும் வடகொரியா, மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதும் கிம் ஜாங் உன், பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அணுஆயுதங்களை ஒரு முக்கிய கேடயமாக அவர் பயன்படுத்தி வருகிறார்.
புதிய சட்டத் திருத்தத்தின்படி, நாட்டின் தலைமைத்துவத்தின் மீது ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், எவ்விதக் காத்திருப்புமின்றி அணுஆயுதங்கள் ஏவப்படும். இது எதிரி நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. கிம் ஜாங் உன் இல்லாத சூழலிலும் வடகொரியாவின் ராணுவம் தன்னிச்சையாகப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் ‘தானியங்கித் தாக்குதல்’ முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கவே இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது.
வடகொரியாவிடம் அணுஆயுதம் இருப்பதால் மட்டுமே அமெரிக்கா அந்த நாட்டின் மீது நேரடித் தாக்குதல்களைத் தவிர்த்து வருவதாகப் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அணுஆயுதக் கொள்கை மாற்றம் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பிற்கும், மிரட்டலுக்கும் இடையே வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வடகொரியாவின் இந்தத் திடீர் மாற்றம் அமெரிக்கா மீதான ஒருவித அச்சத்தின் வெளிப்பாடாகவே தற்காப்பு நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
