தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் ஒரு எம்எல்ஏ-வின் ஆதரவுக்காகக் காத்திருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் விஜய்யின் பலம் 117-ஆக உயர்ந்துள்ள நிலையில், தலா இரண்டு எம்எல்ஏ-க்களை வைத்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு தற்போது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. திருமாவளவனின் ஆதரவு கிடைத்தால் விஜய் எளிதாக அரியணை ஏற முடியும் என்பதால், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் விசிக-வின் இன்றைய அறிவிப்பை நோக்கி நகர்ந்துள்ளது.
ஆதரவு அளிப்பது தொடர்பாக நேற்று உயர்மட்டக் குழுவினருடன் ஜூம் மீட்டிங் நடத்திய திருமாவளவன், விஜய்யிடம் நான்கு அதிரடியான நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதன்மையானது, தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் விசிக-வுக்குப் பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். குறிப்பாக, தமக்குத் துணை முதல்வர் பதவியும், கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவியும் வழங்கப்பட வேண்டும் எனத் திருமாவளவன் டிமாண்ட் வைத்துள்ளார். இந்த நிபந்தனை தவெக தரப்பைச் சற்றுத் திக்குமுக்காடச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு முக்கிய நிபந்தனையாக, தற்போது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன், துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் ஆறு மாதத்திற்குள் எம்எல்ஏ-வாக வேண்டும். இதற்காக விஜய் வெற்றிபெற்ற தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கை ராஜினாமா செய்து, அந்த இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட தவெக வழிவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், காலியாகும் சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விசிக வேட்பாளரைத் தவெக ஆதரிக்க வேண்டும் என்பதோடு, பட்டியலின மக்களின் நல்வாழ்வுக்கான பிரத்யேகச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்ற கொள்கை ரீதியான கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்தக் கடுமையான டிமாண்டுகளைக் கேட்டு தவெக தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசிக-வுக்கு ஒரு அமைச்சர் பதவியை வழங்கத் தயாராக இருக்கும் விஜய், துணை முதல்வர் பதவியை வழங்கத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஒரு எம்எல்ஏ ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், திருமாவளவன் கேட்கும் இவ்வளவு பெரிய அதிகாரப் பங்கீட்டை ஏற்பதா வேண்டாமா என்ற இழுபறி நீடிக்கிறது. இன்று காலை திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்க உள்ள நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி மலருமா அல்லது அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
