தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கடவுள் அருளால் விரைவில் நல்லது நடக்கும்” எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
குறிப்பாக, புதுச்சேரியில் முகாமிட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களை உடனடியாக சென்னைக்கு வருமாறு இபிஎஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், தம்பிதுரையின் இந்த கருத்து தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
