தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான ஒரு சூழல் நிலவி வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிக்கியுள்ளார். தமிழகப் பொறுப்பு கவர்னர் அர்லேக்கரை இரண்டு முறை சந்தித்து விஜய் உரிமை கோரியும், பெரும்பான்மை குறித்த தெளிவான விளக்கம் இல்லை எனக்கூறி கவர்னர் தரப்பு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள விஜய், தனது முக்கிய ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்ராய் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்திய விஜய், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்கு எதிராக மறைமுகமாக சதி செய்வதாகக் குற்றம் சாட்டினார். “ஆட்சி அமைக்க உரிமை கோருவதை இனி நிறுத்திவிடலாம்; யாரால் முடியுமோ அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், அல்லது ஆளுநர் ஆட்சியே வரட்டும்” என்று விரக்தியின் விளிம்பில் பேசியுள்ளார். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினாலும், கவர்னரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கேள்வி கேட்காமல் மெளனம் காப்பது திமுகவின் இரட்டை நிலையைாட்டுவதாக விஜய் சாடியுள்ளார்.
விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க முன்வந்த நிலையில், திமுகவின் அழுத்தம் காரணமாக அவர்கள் தற்போது தயக்கம் காட்டுவதாக அருண்ராய் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர். கவர்னரின் ‘நம்பிக்கை’ மற்றும் ‘திருப்தி’ என்ற சொற்களை வைத்துக்கொண்டு டெல்லி மேலிடம் அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும், சட்ட ரீதியாக தங்களை முடக்கப் பார்ப்பதாகவும் தவெக நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர். தங்களுக்குக் கிடைத்த ஆதரவை திமுக தனது அதிகார பலத்தால் தடுத்து நிறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இருப்பினும், விஜய்யின் விரக்தியைப் பார்த்த மூத்த தலைவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றனர். சட்டப் போராட்டங்கள் மூலமாகவோ அல்லது மக்கள் மன்றத்திலோ இந்த அநீதியை எதிர்கொள்ளலாம் என்று அவர்கள் யோசனை கூறினர். ஆனால், “தைரியம் இருந்தால் மறு தேர்தல் நடத்தட்டும், மக்களைச் சந்திக்கத் தயார்” என்று விஜய் ஆவேசமாகத் தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், தவெகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
