மருத்துவக் கல்லூரியா? சித்திரவதை கூடமா? “என் விரலை உடைச்சிட்டாங்க” கதறிய மருத்துவ மாணவர்… பிரயாக்ராஜ் மருத்துவக் கல்லூரியில் பயங்கர ராகிங்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

 சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், ஜூனியர் மாணவர் ஒருவரைச் சூழ்ந்துகொண்டு சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டுவதைக் காண முடிகிறது. அப்போது அந்த மாணவர் மிகவும் வேதனையுடன், “ஆப்னே மேரி உங்லி மோட் தி” (நீங்கள் எனது விரலை ஒடித்துவிட்டீர்கள்) என்று கதறுகிறார். மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே இத்தகைய ராகிங் சம்பவம் நடந்திருப்பது சக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகிங் புகார்களைக் கையாளும் கல்லூரியின் ‘ஆன்டி-ராகிங்’ கமிட்டி இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், அதில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் யார் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறது.

   

 இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்வது சட்டப்படி குற்றமாகும். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், மதிப்புமிக்க மருத்துவக் கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவருக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், தவறு செய்தவர்கள் மீது முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.