தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட 30 லட்சம் ரூபாய் கடனை அடைக்க குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டனர். இதற்காக ரியல் எஸ்டேட் வியாபாரி விஸ்வநாதம் என்பவரிடம் ஒரு நிலத்தை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். கடனைத் திருப்பிக் கேட்கவே, அவரைத் தீர்த்துக்கட்ட தம்பதியினர் முடிவு செய்தனர்.
கடந்த சனிக்கிழமை, வேறொரு நிலத்தைக் காட்டுவதாகக் கூறி விஸ்வநாதத்தை காரில் அழைத்துச் சென்ற தம்பதியினர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது கழுத்தை கம்பியால் இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 14 சவரன் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு, உடலை ஒரு கால்வாயில் வீசிவிட்டு ஐதராபாத் சென்று நகைகளை விற்றுள்ளனர். காணாமல் போன கணவரைத் தேடி விஸ்வநாதத்தின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், காவலர் பிரவீன் மற்றும் அவரது மனைவி சிக்கினர். விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்கள் கடந்த மாதம் ஒரு மூதாட்டியிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி நகை திருடியதும் தெரியவந்தது. தற்போது இந்தக் காவலர் தம்பதியினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
