அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் உலக நாடுகளை அதிர வைத்துள்ளன. ஆரம்பத்தில் டிரம்ப் நிர்வாகம் சேதங்கள் மிகக் குறைவு என்று குறிப்பிட்ட போதிலும், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் நிலைமை மிக மோசமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஈரானின் துல்லியமான தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவ பலத்தையே அசைத்துப் பார்த்துள்ளதாகவும், 15 ராணுவத் தளங்களில் உள்ள சுமார் 228 கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான தளங்கள் ஈரானின் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டுள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படை தலைமையகம் சந்தித்துள்ள சேதங்களைச் சரிசெய்ய மட்டுமே 200 மில்லியன் டாலர் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, குவைத்தில் இருந்த விலை உயர்ந்த பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள், சவுதி அரேபியாவில் இருந்த E-3 சென்ட்ரி கட்டளை விமானங்கள் மற்றும் ஜோர்டானில் இருந்த நவீன THAAD ரேடார் அமைப்புகள் என அமெரிக்காவின் தற்காப்பு அரண்கள் ஈரானால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
ராணுவத் தளவாட இழப்புகளைப் பொறுத்தவரை, சுமார் 40 ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது. இதில் தலா 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள 24 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் மற்றும் 240 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு MQ-4C ட்ரைடன் ட்ரோன் ஆகியவை அடங்கும். மேலும், 5-ம் தலைமுறைப் போர் விமானமான F-35 கூட சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுவது அமெரிக்காவின் தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்குக் கிடைத்துள்ள பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான தாக்குதல்கள் வீரர்கள் வெளியேறிய பிறகு நடத்தப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், சொத்து இழப்புகள் ஈடுகட்ட முடியாத அளவில் உள்ளன.
இந்த போரினால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு 630 பில்லியன் டாலர் முதல் 1 ட்ரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் எச்சரிக்கின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை 2027-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 1.5 ட்ரில்லியன் டாலரை கோரியிருப்பது அங்கு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மலிவான ட்ரோன்கள், அமெரிக்காவின் அதிநவீன மற்றும் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவித் தாக்கியிருப்பது, அமெரிக்காவின் ராணுவ வியூகத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்பதற்கேற்ப, இந்தப் போர் அமெரிக்காவிற்கு நீண்ட காலப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
