விஜய்க்கு ‘பூவே உனக்காக’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து, அவரது திரைப்பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி. அண்மையில் அவர் காலமான செய்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு அவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில், விஜய் தற்போது சினிமாவில் ஒரு ராஜாவாகத் திகழ்வதாகவும், அவருக்கு எவ்விதக் குறையும் இல்லை என்றும் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வருகிறார் என்றால், அது முழுக்க முழுக்க மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே இருக்கும் என்றும், அவர் மக்களிடம் காட்டும் அன்பு அவரை அரசியலுக்கு இட்டுச் செல்வதாகவும் சௌத்ரி பாராட்டியிருந்தார்.
மேலும், சினிமாவில் அடைந்த வெற்றியைப் போலவே அரசியலிலும் விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார். விஜய் எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் அரசியலில் இறங்குவதால், அவரது வெற்றி உறுதி என அவர் கணித்துக் கூறியிருந்தது, தற்போது விஜய்யின் அரசியல் நகர்வுகளின் பின்னணியில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
