தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட விஜய்க்கு காங்கிரஸின் ஆதரவு கிடைத்துள்ளது. காமராஜர் ஆட்சியை அமைப்பதே தங்களின் நோக்கம் என்றும், பெரியார் மற்றும் அம்பேத்கரின் கொள்கை அடிப்படையில் இந்த கூட்டணி அமையும் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, இனிவரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெகவுடன் பயணிக்கப் போவதாக காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்தை திமுகவினர் “முதுகில் குத்திய செயல்” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 20 ஆண்டுகளாக நீடித்த கூட்டணியை முறித்துக் கொண்டதோடு, திமுகவிடம் இருந்து பெற்ற ராஜ்யசபா எம்.பி பதவியை வைத்துக் கொண்டே காங்கிரஸ் விலகியிருப்பது தார்மீக அடிப்படையில் தவறு என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறுகையில், திமுக அரசு காங்கிரஸை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் முன்கூட்டியே கௌரவித்தது, ஆனால் அந்த நன்றியை காங்கிரஸ் மறந்துவிட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து பெற்ற ராஜ்யசபா பதவியை காங்கிரஸ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மறுபுறம், இந்த விலகல் திமுகவுக்கு ஒரு வகையில் ‘நிம்மதி பெருமூச்சு’ அளிக்கும் என்றும் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்தபோது தொகுதிகளைப் பெறுவதில் காங்கிரஸ் காட்டிய அடம் மற்றும் விசுவாசமற்ற போக்கு திமுகவுக்கு பாரமாகவே இருந்தது. ராகுல் காந்தி முறையாகத் தேர்தல் பிரச்சாரங்களில் கூட பங்கேற்காத நிலையில், காங்கிரஸ் விலகியது திமுகவுக்கு ஒரு பெரும் ‘ரிலீஃப்’ (Relief) ஆக அமையும் எனக் கருதப்படுகிறது. காங்கிரஸின் நிபந்தனைகளும், தேர்தல் கோரிக்கைகளும் இனிமேல்தான் விஜய்க்குத் தெரியவரும் என்றும், அதன் பின்னரே அவர் கூட்டணியின் சிக்கல்களை உணர்வார் என்றும் அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
இருப்பினும், தவெக தலைவர் விஜய் காங்கிரஸுடன் கைகோர்த்திருப்பது அவருக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகம் என தராசு ஷியாம் விமர்சித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் தவெகவை ஆதரித்த நிலையில், மீண்டும் ஒரு பழைய திராவிடக் கூட்டணிக் கட்சியுடன் விஜய் இணைந்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் சூழலில், விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். இதனால் பலம் 107 ஆகக் குறையும் நிலையில், காங்கிரஸின் ஆதரவு அவருக்குத் தேவையாக இருந்தாலும், இது அரசியல் ரீதியாக ஒரு பெரிய பிழை என்றே பார்க்கப்படுகிறது.
