நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்பதாகத் தெரிவித்தார். மேலும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்காகத் தான் நேர்மையாகவும் சிறப்பாகவும் செயல்படப் போவதாக அவர் உறுதி அளித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்தத் திரில் வெற்றியை அடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வியடைந்தது தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் பயணத்தில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றும், தங்களது கடமையைச் செய்துள்ள நிலையில் மக்கள் முடிவை ஏற்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்று கூறிய அவர், “காத்திருங்கள், ஆட்சி அமையும் போது பார்ப்போம்” எனத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பறிபோன வெற்றியை மீட்டெடுக்க திமுக சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகி வருகிறது.
