தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அவர் நாளை மறுநாள் முதல்-அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, தம்பி விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தங்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தம்பி விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டின் உயர்வுக்காகச் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
மேலும், தனது வாழ்த்துச் செய்தியில் தமிழகத்தின் நலனுக்காகவும், மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமைகளுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து களப்பணியாற்றும் என்று சீமான் உறுதிபடக் கூறியுள்ளார். ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தனது கட்சி செயலாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் வெற்றியின் மூலம் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஆரோக்கியமான போட்டியாகச் சீமான் வரவேற்றுள்ளார்.
