தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் திசையையே மாற்றியமைத்துள்ளன. 15 ஆண்டுகளாகத் தமிழ் தேசியம் பேசி, களத்தில் அயராது உழைத்து வந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததுடன், போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்ற நிலையில், தற்போது வெறும் 4 சதவீத வாக்குகளுடன் 19.72 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்று அக்கட்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியிலேயே நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொருபுறம், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் தமிழக அரசியலில் ஒரு புயலென நுழைந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலைப் பிடித்துள்ளது. திமுக மற்றும் அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, ஒரு புதிய மாற்றாக மக்கள் தவெக-வை ஏற்றுக்கொண்டுள்ளனர். 15 ஆண்டுகால சீமானின் போராட்டத்தை விட, விஜய்யின் வருகை மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தன்னை முன்னிறுத்தினாலும், மக்கள் தங்களின் முதன்மையான மாற்றாக விஜய்யைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தத் தோல்வி குறித்து மிகுந்த ஆதங்கத்துடன் பேசியுள்ள சீமான், இது தனது தோல்வி அல்ல, மக்களின் தோல்வி என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். “மாற்று அரசியலை முன்வைத்த எங்களுக்கு மக்கள் இன்னும் கூடுதல் வாக்குகளை அளித்திருக்கலாம். நான் சட்டமன்றத்திற்குள் சென்று இந்தத் தமிழ்ச் சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், தனது தம்பிகளின் உழைப்பு வீண் போகாது என்றும், இன்னும் 10 ஆண்டுகள் போராடியாவது உறுதியாக வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் தனது கொள்கையில் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ள சீமான், தன்னலத்திற்காகத் தடம் பிறழ மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார். நூறு விழுக்காடு மக்களை மட்டுமே நம்பிப் போராடுவதாகவும், மக்கள் தங்களை அங்கீகரிக்கும் வரை இந்தப் பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஒரு பக்கம் விஜய்யின் அசுர வளர்ச்சி, மறுபக்கம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பாதியாகக் குறைந்தது எனத் தமிழக அரசியல் களம் தற்போது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. வரும் காலங்களில் சீமான் தனது வியூகங்களை மாற்றுவாரா அல்லது இதே பாதையில் பயணிப்பாரா என்பதே அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
