குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக் மற்றும் அவரது தந்தை காலிக் மாலெக் ஆகியோர் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கிராமத்தின் குடிநீர் விநியோகத்தைத் துண்டித்துள்ளனர். தனக்கு வாக்களிக்காத காரணத்தால் 10,000 மக்கள் வசிக்கும் அந்தப் பகுதிக்கு ஏப்ரல் 28-ம் தேதி முதல் குடிநீர் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் வழங்க மறுத்த நிலையில், காவல்துறையின் தலையீட்டிற்குப் பிறகே நீர் விநியோகம் சீரானது.
மேலும், தேர்தல் தோல்வியால் ஆத்திரமடைந்த இவர்கள் கையில் வாள்களுடன் கிராமத்தைச் சுற்றி வந்து மக்களை அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இது குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தந்தை மற்றும் மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஆத்திரத்தில் இவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
