நாகர்கோவில் அருகே காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டே தற்கொலை செய்வது போல விளையாட்டாக நடித்த வாலிபர், எதிர்பாராதவிதமாக தூக்குக்கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ற அந்த வாலிபர், வெல்டிங் தொழில் செய்து வந்தவர். தனது தாய் லதாவுடன் சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பத்தினர் அனைவரும் ராமேஸ்வரம் சென்றிருந்த நேரத்தில் முத்துகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், முத்துகிருஷ்ணன் தனது படுக்கை அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் ஜன்னல் வழியாகப் பார்த்தபோதுதான் இந்தத் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்துத் தகவல் அறிந்த அவரது தந்தை அருணாச்சலம், மகனின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முத்துகிருஷ்ணன் தனது காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாகத் தற்கொலை செய்துகொள்வது போல நடித்துக் காட்டியதாகத் தெரியவந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாகக் கயிறு கழுத்தை இறுக்கியதில் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
