பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பாகிஸ்தான் தற்போது முழுமையாக வணிக ரீதியிலான எண்ணெய் இருப்புகளை மட்டுமே நம்பியிருப்பதாகவும், கச்சா எண்ணெய் கையிருப்பு வெறும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வரும் வேளையில், சமீபத்தில் அந்நாட்டு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் வலுவான பொருளாதார மேலாண்மையை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியா சுமார் 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான மூலோபாய எண்ணெய் இருப்பைக் (Strategic Oil Reserves) கொண்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் விலை மாறினாலும் வரிகளைச் சீரமைப்பதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நிதி பலம் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவைப்படும்போது உடனடியாக எண்ணெயை விடுவிக்கும் நிலையில் உள்ள இந்தியாவைப் போல பாகிஸ்தான் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
