சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவூர் பேரூராட்சி தவெக துணைச் செயலாளரும், எலக்ட்ரீசியனுமான அருண்குமார் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்கள் நால்வருடன் வினோபாஜி நகர் வாய்க்கால் கரையோரம் இருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமாரை, அங்கிருந்தவர்கள் மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தேவூர் போலீசார் நடத்திய விசாரணையில், அருண்குமார் தவறி விழவில்லை என்பதும், நண்பர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி தகராறில் அவர் தாக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, போலீசார் இதனை ஒரு கொலை வழக்காகப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முன்னாள் கொலைக் குற்றவாளி அன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நண்பர்களே அடித்துவிட்டு, விபத்து என்று நாடகமாடி மருத்துவமனையில் அனுமதித்த இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
