ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத் தண்ணீர் எடுக்கச் சென்ற ஒரு இளம் பெண்ணை, அங்கு மறைந்திருந்த இரு காம மிருகங்கள் வழிமறித்துச் சீரழித்துள்ளன. அந்தப் பெண்ணின் உடலைச் சிதைத்ததோடு மட்டுமல்லாமல், அவரது அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இந்த மிருகத்தனமான செயலால் அந்தப் பெண் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தக் கொடூரத்திற்கு அடுத்தபடியாக, அந்த மாநிலத்தின் அவலமான மருத்துவக் கட்டமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மிக மோசமான நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கவில்லை. வலியால் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட வழங்க முடியாத அளவிற்கு அங்குள்ள சிஸ்டம் முடங்கிக் கிடந்தது பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.
வேறு வழியின்றி, கிராம மக்கள் அந்தப் பெண்ணை ஒரு தள்ளுவண்டியில் (Cart) ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். “முதலில் வன்கொடுமை, பிறகு அதிகாரிகளின் அலட்சியம்” என அந்தப் பெண் இரட்டைத் துயரத்திற்கு ஆளானார். ஒரு தள்ளுவண்டியில் சுயநினைவற்ற நிலையில் அந்தப் பெண் கொண்டு செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒடிசா அரசின் நிர்வாகச் சீர்கேட்டைத் தோலுரித்துக் காட்டியுள்ளன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
