ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 43 வயது புஷ்பராணி, தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, அங்கேயே வேலை செய்த 32 வயது மகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த இவர்களது திருமணத்தை மீறிய உறவில், புஷ்பராணி அடிக்கடி மகேந்திரனைத் தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். மகேந்திரன் மறுத்தபோது, அவர்களது உறவு குறித்து மனைவியிடம் கூறிவிடுவேன் என புஷ்பராணி மிரட்டியதாகத் தெரிகிறது.
இந்தத் தொல்லையிலிருந்து விடுபட நினைத்த மகேந்திரன், தனது அக்கா கணவர் சதீஷுடன் சேர்ந்து புஷ்பராணியைக் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி, கடந்த 25-ம் தேதி உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, புஷ்பராணியை காரில் ஒகேனக்கல் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள வனப்பகுதியில் வைத்துத் தன்னை மறந்துவிடுமாறு மகேந்திரன் கூறியபோது, புஷ்பராணி அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரனும் சதீஷும் மறைத்து வைத்திருந்த கட்டுக்கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலைத் தொப்பையாறு பகுதியில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். காணாமல் போன புஷ்பராணி குறித்துக் கோபி போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் மகேந்திரனுடன் அவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் மகேந்திரனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் கொலையை ஒப்புக்கொண்டார். தர்மபுரி அருகே புஷ்பராணியின் சடலத்தை மீட்ட போலீசார், மகேந்திரன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு முறையற்ற உறவு, இறுதியில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு, இரண்டு ஆண்களைச் சிறைக்கும் தள்ளியுள்ளது இச்சம்பவம்.
