கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, போதைக்கு பணம் இல்லாத காரணத்தால் இரண்டு வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுவீரப்பட்டு பத்திரக்கோட்டை பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தையை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாக்லேட் தருவதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார். குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையைத் தீவிரப்படுத்தியதைக் கண்டு பயந்த கடத்தல்காரன், குழந்தையை புலியூர் காட்டுப்பகுதி அருகே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றான். அவ்வழியாகச் சென்ற விவசாயி ஒருவர் தனியாக இருந்த குழந்தையை மீட்டு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மருத்துவப் பரிசோதனையில் குழந்தை நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான அப்பாச்சி பைக்கின் அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது புலியூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி வெற்றிவேல் (27) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால், குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தைப் பறிப்பதற்காகவே குழந்தையைக் கடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, வெற்றிவேலை கைது செய்த போலீசார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். “காவல்துறையின் உடனடி நடவடிக்கையாலும், சிசிடிவி ஆய்வாலும் குற்றவாளி விரைவாகக் கண்டறியப்பட்டார்” என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஒரு சிறிய நகைக்காகக் குழந்தையைக் கடத்திய இச்சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
