பெங்களூருவின் பரபரப்பான சாலையில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனால் வாகனத்தின் இருக்கையில் அமர்ந்து கூடச் சரியாக ஓட்ட முடியாத நிலையில், நின்றுகொண்டே வண்டியை ஓட்டுவதும், நிறுத்தும்போது கீழே குதித்துப் பிடிப்பதுமாக இருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன. போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக மீறி, பொதுமக்களின் உயிருக்கும் தனது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அந்தச் சிறுவன் வாகனம் ஓட்டியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிறுவனின் பெற்றோரின் பொறுப்பற்றத்தனமே முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வளவு சிறிய வயதில் மோட்டார் வாகனத்தைக் கையாள அனுமதிப்பது ‘நவீனமயமாக்கல்’ அல்ல, அது மிகப்பெரிய அஜாக்கிரதை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனுபவம் வாய்ந்தவர்களுக்கே சாலைகள் சவாலாக இருக்கும் நிலையில், ஒரு சிறு தவறு நடந்தாலும் அது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாகக் கர்நாடகக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மைனர் குழந்தைகளிடம் வாகனத்தைக் கொடுக்கும் பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
