மதுரை மாவட்டம் பெருங்குடியில் குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்து செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி அதிசிவன் நகரைச் சேர்ந்த 30 வயதான சிவபெருமாள் என்பவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகித் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்ட நிலையில், சிவபெருமாள் தனது தாய் பொற்கொடியுடன் வசித்து வந்தார்.
எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாகச் சுற்றி வந்த சிவபெருமாள், தனது தாயிடமும் மது குடிக்கப் பணம் கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், தனது தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு பின்னர் போதையில் உறங்கியுள்ளார். நீண்ட நாட்களாக மகனின் தொந்தரவினால் மன உளைச்சலில் இருந்த பொற்கொடி, ஆத்திரத்தின் உச்சியில் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த மகனின் தலையில் போட்டுள்ளார்.
இதில் சிவபெருமாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கைகளில் ரத்தக் கறையுடன் பொற்கொடி வீட்டின் வெளியே அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெருங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிவபெருமாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மகனின் போதை மற்றும் அடாத நடத்தையினால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையைச் செய்ததாகப் பொற்கொடி வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் பொற்கொடியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுப்பழக்கம் ஒரு குடும்பத்தையே சீரழித்து, தாயையே மகனைத் தீர்த்துக் கட்டும் நிலைக்குத் தள்ளிய இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
